நாம் இந்த நாட்டில் பலமாக இருக்கும் வரையில், இந்த நாட்டில் எந்த தோற்றத்திலும் இனக் கலவரமொன்று ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
சிங்க இரத்தம், தமிழ் இரத்தம், முஸ்லிம் இரத்தம் என சொல்கிறார்கள். இருப்பினும், எம்மிடம் இருப்பது மனித இரத்தம் ஒன்று மட்டுமே. ஒருவரை ஒருவர் கோபத்துடனும், குரோதத்துடனும் பார்க்கும் ஒரு சமூகம் எமக்குத் தேவையில்லை. சிங்கள, தமிழர், முஸ்லிம், பேகர், மலே ஆகிய சகல இன மக்களும் ஒன்றுமையாக மனிதத்துவத்துடன் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எமக்கு இந்நாட்டில் இனவாதத்துக்கு எதிராக ஒரு போராட்டம் உள்ளது.
எமது நாடு 30 வருட யுத்தத்துக்கு முகம் கொடுத்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை இது வரை கூறமுடியாதுள்ளது. அழிந்த சொத்துக்கள் எவ்வளவு என தெரியாது. இந்த நாடு இரத்தத்தால் நனைந்தது. கண்ணீரினால் கழுவப்பட்டது. வரலாற்றில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்நாட்டில் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம், முஸ்லிம் இனவாதம் என உருவாக்கப்பட்டன. இதற்காக, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் சாதாரண தாய், தந்தையின் பிள்ளைகள் பொறுப்பாளர்கள் அல்லர்.
வடக்கினதும், தெற்கினதும் அதிகாரத்தை பெறுவதற்காக இனவாதத்தை தூண்டி விட்டனர். யுத்தமொன்றுக்கு இழுத்துச் சென்றனர். இந்த யுத்தத்தினால் இறந்தவர்கள் சாதாரண தாய், தந்தையின் பிள்ளைகள். வடக்கில் மாத்திரம் யுத்தத்தினால் விதவையானவர்கள் 40 ஆயிரம் பேர் உள்ளனர். தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் 2500 பேர் உள்ளனர்.
இந்த யுத்தம் மனித நேயத்தையும், ஒற்றுமையையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது. இவை அனைத்தும் பொது மக்களுடையது. ஆட்சியாளர்கள் இந்த இனவாத யுத்தத்தில் உயிரை விடவில்லை. அவர்கள் இனவாதத்தை தூண்டியவர்கள் மட்டுமே. பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மாத்திரமே. அவர்கள் ஆட்சியை மாத்திரமே எதிர்பார்க்கின்றனர். இது இவ்வாறிருப்பதனால், இந்த நாட்டில் இதன் பின்னர் ஒரு யுத்தம் ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போது கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !