அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை பட்டப்பகல் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொலையுண்ட சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் பெண்முகாமையாளர் திருமதி திலீபன் சுலக்சனாவின் சடலம் நேற்று திங்களன்று மாலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று கல்முனையில் இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. அன்று மாலை 8.00 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அவரது சடலம் கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு நாட்கள் வைத்தியசாலை செயற்பாடுகளின் பின்னர் நேற்று மாலை 8மணியளவில் சடலம் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.
சடலம் இன்று 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்பிட்டிமுனையிலுள்ள அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பெருந்திரளான பொதுமக்கள் மரணவீட்டிற்கு சென்று தமது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். மாலையில் அடக்கம் செய்யப்படுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கொலைச் சந்தேக நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என்று கோரி மாதர் அமைப்புகள் ஒரு போராட்டத்தை நடாத்த திட்டமிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 நாள் விளக்கமறியல்!
இதேவேளை கொலைச் சந்தேக நபரான முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமாருக்கு 14 நாள் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பொலிசார் நேற்று மாலை 5மணியளவில் கல்முனை மாவட்டநீதிபதியும் பதில்நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமாகிய இராமகமலன் முன் சந்தேகநபரை ஆஜர்ப்படுத்தினர். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட கொலைச் சந்தேக நபரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தனக்கேற்பட்ட அவமானம், மன உளைச்சல், விரக்தி காரணமாகவே இக்குற்றத்தை செய்ததாக பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் தெரிகிறது.
இதேவேளை கல்முனைப் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல்கபார் தகவல் தருகையில்,
இக் கொலைச்சம்பவம் தொடர்பில் நாம் மேலும் பல தகவல்களைப் பெற்று வருகின்றோம். விசாரணை மிகவும் சரியான திசையில் நடைபெற்று வருகிறது. வங்கியில் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது என்றார்.
காரைதீவு நிருபர் சகா-
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !