அடுத்த வரும் வாரங்களில் அதிரடி கைதுகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் இந்த கைதுகள் அமையவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012ம் இடம்பெற்ற தாஜுதீன் கொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அது விபத்தல்ல கொலையென கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 16 பேரின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது. இவர்கள் சூழ்நிலைச் சாட்சியங்களின் அடிப்படையில், கைது செய்யப்படவுள்ளனர்.
அந்தக் காலகட்டத்தில் பதவியில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் பலரும் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் சாட்சியங்களை மறைத்து, விசாரணைகளைத் திசை திருப்பியுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
அதேவேளை, முதற்கட்டமாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போனமைக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !