பிரதமருக்கான வாகனக் கொள்வனவு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவால் வௌியிடப்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்சைகள் பற்றி மக்களுக்கு உண்மை நிலையை தௌிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்கவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் அலுவலகத்தால் அவரது பயன்பாட்டுக்காக எந்தவொரு உத்தியோகபூர்வ வாகனமோ பாதுகாப்பு வாகனமோ வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட இரு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஜூப் வண்டி ஒன்றையுமே, அவர் பயன்படுத்தி வந்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவையும் பழையவை, குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட விபரம் இல்லாமையால் அவற்றை பதிவு செய்யவோ பயன்படுத்தவோ முடியவில்லை, மேலும் அந்த வாகனங்களில் நிலையும் நன்றாக இல்லை, தினம் தினம் புனரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, 2015ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி முதல் புனரமைப்பு மற்றும் பராமரிப்புக்காக 9.8 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் ரணில் விக்ரமசிங்க பல சந்தர்ப்பங்களில் தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்தியுள்ளார், இதற்காக எந்தவொரு பணமும் வழங்கப்படவில்லை எனவும் சாகல ரத்நாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிரதமர் அலுவலகத்தால் உத்தியோகபூர்வ வாகனம் வழங்காமையால், புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதில் தவறில்லை எனவும் கூறியுள்ள அவர், பிரதமருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு முன்வைத்துள்ள அறிக்கையின் பிரகாரம் முதல்கட்டமாக அவருக்கு பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பாதுகாப்பு வாகனங்கள் இரண்டைக் கொள்வனவு செய்ய 128 மில்லியன் செலவாகும். ஏனைய 468 மில்லியன் ரூபாய் அரசாங்க வரிப் பணம். அவை அரசாங்கத்தின் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றப்படுபவை, உண்மையாக செலவிடப்படும் பணம் அல்ல எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !