ஐ.நாவின் ஊழல்களையும், குறிப்பாக தமிழீழப்படுகொலையில் பங்குபெற்றதைக் குறித்தும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மேத்யூலீ ஐ.நாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இவர் பணியாற்றிய இன்னர்-சிட்டி பிரஸ் பத்திரிக்கை ஐ,நாவின் நடவெடிக்கைகளைக் குறித்து விமர்சனப்பூர்வமாகவும், அதன் நம்பகமற்றத் தன்மைகொண்டவர்களையும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்தது.
ஐ.நாவின் பத்திரிக்கையாளர் குழுவின் தலைவருக்கு இலங்கையின் அதிகாரி பலிதகொஹன்னா லஞ்சமாக வாடகை என்கிற பெயரில் பணம் கொடுத்தது முதல், ஈழப்படுகொலையில் ஐ.நா இழைத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயன்ற தருணத்தில், அந்த அறிக்கையின் மிக முக்கிய பக்கங்களை எடுத்து அம்பலப்படுத்தினார்.
இலங்கையைப் பற்றி தொடர்ந்து குரல் எழுப்பியவர் இவர். ஐ.நாவிற்கு சங்கடமேற்படுத்தும் வகையில் இவரது கேள்விகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது.
சேனல்4 காணொளியை ஐ.நாவில் திரையிட ஐ.நா அதிகாரிகள் அனுமதிக்கவில்லை , மாறாக, இலங்கை சேனல்4ற்கு எதிராக எடுத்த பொய் காணொளி திரையிடப்பட்டதை கண்டித்தும் இவர் கேள்வி எழுப்பியவர்…
விஜய்நம்பியாரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தியதில் இருந்து , கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்த தகவல் வரை ஐ.நாவின் செயல்பாடுகளை உலகிற்கு கொண்டுவந்த அச்சமற்ற ’போராளி’ பத்திரிக்கையாளர்.
பான் -கி-மூனிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் என பல்வேறு விவரங்களை உலகிற்கு அம்பலப்படுத்தி தமிழர்களுக்கு பெரும் துணையாக இருந்த மாத்யூலீக்கு தமிழர்கள் எவ்வகையான ஆதரவை வழங்கப் போகிறார்கள் ? குறைந்த பட்சம் ஐ.நாவிற்கு எதிர்ப்பினை பதிவு செய்வார்களா?..
விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுகிறோம், விமர்சனம் செய்கிறோம் என்று இலக்கிய-படைப்பாளி-அறிவுசீவிகள் முதல் பலர் களம் இறங்கிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ‘இலங்கையின் குற்றங்கள்’ , ‘சர்வதேசத்தின் குற்றப்பங்களிப்புகள்’ ஆகியவற்றை சமரசமின்றி உலகிற்கு அம்பலப்படுத்தும் இதுபோன்ற போராளிகளே தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கு தேவையானவர்கள்.
இவரது குரல் நசுக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தின் அறிவுசீவிகள் , படைப்பாளிகள், இலக்கியவாதிகள் குரல் கொடுப்பார்களா?…
கருத்துச் சுதந்திரமற்றவர்கள் என்று புலிகளுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுதிய கனவானகள் , ஐ.நாவின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகவும் பேசுவார்களா?
ஈழம் என்று பேசினால் தங்களது தரம் தாழ்ந்துவிடும் என்று நகர்ந்து செல்லும் பல்வேறு அறிவிசீவிகள் மேத்யூலீ ஆச்சரியமானவராகவே தோன்றுகின்றார்.
என்.ஜி.ஓக்களின் தாயகமாக விளங்கும் ஐ.நாவினை எதிர்த்து குரல் கொடுக்க மறுக்கும் தமிழகத்தின் அறிவுசீவிகளின் பின்னனியில் இயங்குவதும் என்.ஜி.ஓக்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமன்று.
மேத்யூலீக்காக குரல் கொடுப்பார்களா? இல்லையா என்று இவர்களது நேர்மையை அறிந்துகொள்ள முயல்வோம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !